Flash News

Friends Tamil Chat

Search This Blog

Monday 22 December 2014

மூச்சு என்ன செய்யும்? - What is Breathing?







மூச்சு என்ன செய்யும்?
********************************
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம்.
சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.
சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை.
சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம்.
ஒன்று
நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது.
இரண்டு
இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது .
அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது.
இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும்.
இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.

செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது.
அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.
உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும்.
வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும்.
பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது.
சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.
எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.
செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.
காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.
அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும் மேம்படுகிறது.
என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.
அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ?
நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம் , தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?
ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும்.
மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியாது.
இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு.
எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது நிச்சயம்.
ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம்.
ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.
தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை.
கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.
எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.
அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான்.


மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.
எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.
நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.
ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.

பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும்.
உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தி பெற்று மரணத்தை வெல்லலாம்.
"மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும், மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்". – அகத்தியர்.



--