Sunday, 22 February 2015

டெல்லி பஸ்களில் பெண்கள் பாதுகாப்பு

டெல்லி பஸ்களில் பெண்கள் பாதுகாப்புக்கு அரசு புதிய வியூகம்

கோப்புப் படம்.

டெல்லி பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், வல்லுறவுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் 'கூட்டு அதிரடிப் படை' என்ற புதிய வியூகத்தை வகுத்திருக்கிறது அம்மாநில அரசு.
இது குறித்து டெல்லி அதிகாரி ஒருவர் கூறும்போது, "டெல்லியில் பெண் பயணிகளுக்கு உள்ள ஆபத்தை அரசு புரிந்துகொண்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பேருந்தில் இரவு நேர பயணங்கள் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இதற்கு வழி ஏற்படுத்த தன்னார்வலர்களிடமிருந்து யோசனைகள் கேட்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. அதில் 'கூட்டு அதிரடிப் படை' என்ற திட்டம் இந்த பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தலாம் என்று யூகிக்கப்படுகிறது.
முதல்வர் கேஜ்ரிவால் இந்தத் திட்டத்துக்காக பணியாற்றக் கூடிய பாதுகாவலர்களை நியமிக்க மனிதவள ஆற்றல் நிபுணர்களின் உதவியைக் கோரியுள்ளார். அவர்கள் அளிக்கும் நபர்களைக் கொண்டு பயணங்களின் போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முன்மொழிவை சிவில் பாதுகாப்புத் துறை அரசிடம் விரைவில் வழங்க உள்ளது.
டெல்லி ஊர்காவல்படை தற்போது வருவாய்த் துறைக்கு கீழ் இயங்குவதால், அரசு இந்த திட்டக் குறிப்பை அந்த துறைக்கு அனுப்பியுள்ளது. ஊர்காவல் படையின் வசம் சுமார் 17,000 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுய பாதுகாப்புப் பயிற்சி அளித்து வருகின்றனர். சாலை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
இதைத் தவிர ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு ஊர்காவல்படையை வருவாய்த் துறையின் கீழ் கொண்டு வந்து உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியாக மக்களிடம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெண்கள், கூட்டு அதிரடிப் படை, டெல்லி, Delhi, women safety

பேஸ்புக்கில் பொங்கி எழுந்த அருந்த(தி)தீ

அருந்ததி

பேஸ்புக்கில் பொங்கி எழுந்த அருந்த(தி)தீ
சமூக வலைத்தளங்கள் வரமா...சாபமா என்ற விவாதம் என்றைக்குமே நீண்டு கொண்டுதான் இருக்கப்போகிறது.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை நட்புக்காகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில் அதை முழுக்க முழுக்க வக்கிர புத்தியின் வடிகாலாக பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.
அப்படிப்பட்ட ஒரு 'பெருமித ஜொள்ளரின்' விஷமங்கள் அவர் பயன்படுத்திய அதே பேஸ்புக்கில் அம்பலமாக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த நபரால் துரத்தப்பட்ட ஒரு பெண்ணாலேயே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. பொருத்தது போதும் பொங்கி எழு... என்ற அடக்க முடியாத கோப உணர்வின் வெளிப்பாடுதான் அந்த பேஸ்புக் பதிவு.
அருந்ததி பி. நலுகெட்டில், இவர் ஹைதராபாத்தில் சமூக ஆர்வலராக இருக்கிறார். அழகான தோற்றம் கொண்டிருப்பது அவர் தவறல்லவே. ஆனால், அந்த தோற்றத்துக்காகவே வெகு நாட்களாக பேஸ்புக் போன்ற வலைதளங்களில் ஒரு நபரால் தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். ஜொள்ளரின் தொந்தரவு எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தது. உதாரணத்திற்கு அவர் அனுப்பிய ஒரு மெசேஜ் "அருந்ததி என்னை தயவுசெய்து பேஸ்புக்கில் சேர்த்துக் கொள்ளவும். நீங்கள் மிகவும் செக்ஸியாக இருக்கிறீர்கள். உங்கள் போன் நம்பரைக் கொடுங்கள். என்னுடன் உறவு கொள்ள தயரா? (மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)".
நாளுக்குநாள் வக்கிர மெசேஜ்களின் எண்ணிக்கை அதகரித்தது. அப்போதுதான், அருந்ததி அந்த முடிவை எடுத்தார்.
அருந்ததி அந்த நபர் குறித்து போலீஸில் புகார் தெரிவித்திருக்கலாம், இல்லையேல், அந்த நபரை போனில் தொடர்பு கொண்டு வசை பாடியிருக்கலாம். ஆனால், அவர் செய்தது எல்லாம் இது மட்டுமே. குறிப்பிட்ட அந்த நபரிடம் இருந்து வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.,கள், பேஸ்புக் சேட் பாக்ஸில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை அப்படியே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்கமாக பகிர்ந்தார்.
இதோ அவர் பதிவு செய்த நிலைத்தகவல்:

தொழில்நுட்பம் வளரும் அதே வேகத்திற்கு அதைப் பயன்படுத்தி பாலியல் வக்கிரங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதற்கு அருந்ததியின் அணுகுமுறையும் ஒரு படிப்பினையே. அத்துமீறல்களை பொறுத்துக் கொண்டிருப்பது கோழைத்தனம். கோழைகளாக இல்லாமல்... அருந்ததிகளாக இருக்கலாம்.
அருந்ததி, பேஸ்புக், பாலியல் தொந்தரவு, பாலியல் அத்துமீறல், Facebook, Sexual abuse, Arundathi, Social Activist